-இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி
இலங்கையில் வடக்கில் தான் தனிநாட்டு கோரிக்கையுடன் பெரிய அமைப்பு ஒன்று உருவாகியது. அதனாலையே அதிகளவான இராணுவத்தினர் வடக்கில் உள்ளனர் என யாழ்.மாவட்ட இராணுவ தளபதி தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பலாலி இராணுவ தலைமையகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
நாட்டின் ஏனைய பாகங்களில் தனிநாட்டு கோரிக்கையுடன் ஆயுத அமைப்புக்களோ . போராட்டங்களோ தோற்றம் பெறவில்லை. வடக்கில் தான் அவ்வாறு தோற்றம் பெற்றது. அதனால் மீண்டும் அவ்வாறான அமைப்புக்கள் போராட்டங்கள் தொடர கூடாது என்பதனால் தான் இராணுவம் வடக்கில் அதிகளவில் நிலை கொண்டுள்ளது. என தெரிவித்தார்.
அதன் போது ஊடகவியலாளர் ஒருவர் தெற்கில் ஜே.வி.பி. தோற்றம் பற்றியும் , அதன் கலவரத்தின் போது கொல்லப்பட்ட அவர்களின் தோழர்களை அவர்கள் நினைவு கூறுவது அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் கேட்ட போது ,
அவர்கள் தனிநாட்டு கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தை முன்னெடுக்க வில்லை. அவர்களிடம் தனிநாட்டு கோரிக்கை இருந்ததில்லை.
ஆனால் வடக்கில் அந்த நிலைமை காணப்படவில்லை. வடக்கில் தனி நாட்டு கோரிக்கையை முன் வைத்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது யுத்தம் முடிவுக்கு வந்துள்ள போதிலும் புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இன்னமும் தனிநாட்டு கோரிக்கையை கைவிடவில்லை.
அதனால் மீண்டும் வடக்கில் தனிநாட்டு கோரிக்கையை முன் வைத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் எனும் நிலைமை உள்ளது என தெரிவித்தார்.