SHARE

அனுராதபுர சிறைச்சாலையை நோக்கி, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டு வரும் நடை பவனி இன்று மூன்றாவது நாளாகவும்  தொடர்கிறது.

காயங்கள் வலிகள் என கால்கள் சோர்வடைந்து களைத்தபோதிலும் மன உறுதி தழராது இன்று மாங்குளம் நோக்கி நடக்குறார்கள்.

அனுராதபுர சிறைச்சாலை மற்றும் கொழும்பு – மகசின் சிறைச்சாலை என்பனவற்றில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும்,  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் நடைபவனி ஒன்றை ஆரம்பித்தனர்.

யாழ். பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த இந்த நடைபவனி அனுராதபுர சிறைச்சாலை நோக்கி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நேற்றுமுன்தினம் காலை ஆரம்பித்த நடைபவனியில் பங்கேற்ற மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு இயக்கச்சியை வந்தடைந்தனர்.

அங்கு தங்கி விட்டு, நேற்றுக்காலை மீண்டும் நடைபவனியை ஆரம்பித்த மாணவர்கள் கிளிநொச்சியை நேற்று நண்பகல் கடந்து சென்றனர். நேற்றிரவு பனிக்கன்குளம் பிரதேசத்தில் தங்கியிருந்த அவர்கள் இன்று காலை மீண்டும் தமது நடைப்பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று மாங்குளத்தைத் தாண்டி தமது பயணம் தொடரும் என அறிவித்துள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தம்முடன் பல்கலைக்கழக பழைய மாணவர்களும் இணைந்துள்ளதாகவும் அரசியல் வேறுபாடின்றி அனைவரது ஒத்துளைப்பையும் கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

 

Print Friendly, PDF & Email