SHARE

யாழில்.  மகனைத் தாக்க வந்தவர்களைத் தடுக்க முற்பட்ட தாயை பொல்லு, கம்பியால் அடித்து துடிதுடிக்க கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

யாழ். ஊரெழு மேற்கு சரஸ்வதி சனசமூக நிலைய பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் இந்தக் கொடூரச் சம்பவம் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தில் சந்திரராசா விஜயகுமாரி (வயது-58) என்ற குடும்பப் பெண்ணே கொலை செய்யப்பட்டார். அவரது மகன் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,

காயமடைந்த குறித்த இளைஞன் வீதியால் சென்று கொண்டிருந்த போது , சில இளைஞர்கள் அவருடன் முரண்பட்டு உள்ளனர். பின்னர் குறித்த இளைஞனின் வீட்டுக்கு எட்டு பேர் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் வந்துள்ளனர்.

அந்த கும்பல் தடிகள் , இரும்புக்கம்பிகள் சகிதம் இளைஞனின் வீட்டுக்குள் புகுந்து இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளனர். அதன் போது வீட்டில் இருந்த இளைஞனின் தாயார் தனது மகனை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அந்த கும்பல் தாயார் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான தாயார் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மகன் படுகாயமடைந்துள்ளார். அதனை அடுத்து தாக்குதல் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு எடுத்து சென்றனர். அத்துடன் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் .

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் , தாக்குதலாளிகளை அடையாளம் கண்டு உள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email