SHARE

சாவகச்சேரியில் உள்ள வீடென்றுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கிருந்த பெண்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

தாக்குதலுக்கு இலக்கான பெண்களின் அபயகுரல் கேட்டு அவர்களை காப்பாற்ற சென்ற அயலவர்கள் மீதும் தாக்குதலாளிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

சாவகச்சேரி கச்சாய் வீதியில் உள்ள உதயசூரியன் கிராமத்தில் உள்ள வீடொன்றுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மோட்டார் சைக்கிளில் வந்த 15க்கும் மேற்பட்ட நபர்கள் அத்துமீறி உள்நுழைந்து வீட்டில் இருந்த இரு பெண்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வீட்டுக்கு வெளியே இழுத்து வந்துள்ளார்கள்.

அதன் போது தாக்குதலுக்கு இலக்கான பெண்கள் அபயகுரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் உதவிக்கு சென்ற போது தாக்குதலாலிகள் அயலவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் 7 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும், இருவர் மாத்திரமே சாவகச்சேரி வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இரவு இரு இளைஞர்கள் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Print Friendly, PDF & Email