SHARE

நாடாளுமன்றத்தை மூடிவைக்காது அதை உடனடியாகக்கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு மைத்திரி, மஹிந்த கூட்டணிக்கு ஐக்கிய தேசியக்கட்சி இன்று சவால் விடுத்துள்ளது.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக கொழும்பில் இன்று நடைபெற்ற பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ஐ.தே.கவின் பொதுச்செயலாளரான அகில விராஜ் காரியவசம் இந்த சவாலை விடுத்தார்.

“ நாடாளுமன்றத்தை அடிக்கடி ஒத்திவைத்து வருகின்றனர். 5 ஆம் திகதி என்றனர்.7 ஆம் திகதி என்றனர். 14ஆம் திகதி என்கின்றனர். 16 ஆம் திகதி என்கின்றனர். அதேவளை நேற்று நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா என சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை கேட்டுள்ளனர்.

அவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைய கலைக்க முடியதது என்று கூறியிருக்கின்றார். இவற்றின் மூலம் ராஜபக்சவினருக்கும் மைத்திரிக்கும் பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தினால், கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சித்து வருகின்றனர். எனவே, நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் அதனை பாதுகாக்கவும் கட்சி பேதமின்றி அனைவரும் இணையுமாறு கோரிக்கை விடுக்கின்றோம்” என்றும் கூறினார்.

Print Friendly, PDF & Email