SHARE

இராணுவ முகாமுக்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட முற்பட்டார்கள் என குற்றம் சாட்டி இருவரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காங்கேசன்துறை தையிட்டி பகுதியில் உள்ள இராணுவமுகாமுக்குள் புகுந்து இரும்புகள் உள்ளிட்ட பொருட்களை திருடினார்கள் என இருவரை நேற்றைய தினம் இராணுவத்தினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் இராணுவத்தினர் ஒப்படைத்தனர். அவர்களிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் இருவரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.

அதனை அடுத்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் இருவரையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அதேவேளை காங்கேசன்துறையில் இராணுவத்தினரால் நடத்தப்படும் “தல்செவன” விருந்தினர் விடுதி , அதனை அண்டிய உல்லாச கடற்கரை பகுதிக்கு வருவோரின் உடமைகளை திருடி வந்தார் எனும் குற்றசாட்டில் இளைஞன் ஒருவர் நேற்றைய தினம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பெண்களின் பணப்பை , ஒரு தொகை பணம் , தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் உள்ளிட்டவை மீட்கப்பட்டதாகவும், அவரின் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றி உள்ளதாகவும் , குறித்த நபரிடம் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email