SHARE

தற்போதைய அரசியல் நெருக்கடியை  வெளிப்படையான முறையில்,  ஜனநாயக வழியில் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்காவையும், அதன் தலைவர்களையும் ஒரு நண்பராகவும், பங்குதாரராகவும், நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவராகப் பதவியேற்ற பின்னர் முதல்முறையாக அளித்துள்ள ஊடகச் செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

”இந்த மோதல்களில் நாங்கள் ஈடுபாடு கொள்ளவில்லை. இந்த அரசியல் போட்டியில் எங்களுக்குப் பிடித்தமானவை என்றும் கிடையாது.

அரசியலமைப்பு நடைமுறைகளையும், வெளிப்படைத்தன்மையையும் மதிக்கும் ஒரு சட்டபூர்வமான அரசாங்கம் உருவாக்கப்படுவதைத் தான், நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அரசியலமைப்பு கட்டமைப்புக்குள் இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம்.

இந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு  அரசியல் தலைமைக்கும் சிறிலங்கா அதிபர் சிறிசேனவும் நாம் அழைப்பு விடுத்துள்ளோம்.

நாட்டின் அரசியல் நற்பெயரை சிறிலங்கா மீட்டெடுக்க வேண்டும். அதற்கு  வாய்ப்பு உள்ளது.  இது மிகவும் முக்கியமானது. தற்போதைய அரசியல் நெருக்கடி இந்த நற்பெயரை குறைக்கலாம்.

இந்த நெருக்கடியினால், சில மோசமான பொருளாதார விளைவுகள் ஏற்படுகின்றன. சிறிலங்காவின் அரசியல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களுக்கு சில சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன் – என்றார்.

Print Friendly, PDF & Email