SHARE

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பல்லின மக்களின் முன்னிலையில் நினைவுகூர்ந்து, தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் மாநாடு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.

பல்லின மக்களின் வருகையோடு நடைபெற்ற இம் மாநாட்டில் நெருக்கடியான சூழலில் மனித உரிமைக்காக உழைத்தவர்களான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் மறைந்த பிரான்சிஸ் சேவியர் மற்றும் கத்தோலிக்க பங்குத்தந்தை ஜேசப் மேரி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

மனிதனின் உரிமைகளை பேணிக்காக ஜக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் டிசம்பர் 10 ஆம் திகதி மனித உரிமைகள் தினமாக பிரகடணபடுத்தியதை நினைவுகூறுவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்ற மனித உரிமை மீறல்களை நினைவுகூர்ந்து அவற்றை சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் தமிழ் தகவல் நடுவம் (TIC) ஆண்டுதோறும் மேற்படி நிகழ்வை கொண்டாடி வருகின்றது.

இந்நிலையில், நடப்பாண்டுக்கான தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தின மாநாடு இன்று New Malden எனும் இடத்தில் நடைபெற்றது.

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் எட் டேவி பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஆர்வலர்கள், தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர்கள் மற்றும் பல்லின மக்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.

திருமதி சர்வா குமாரராஜாவின் தலைமையில் தமிழ் தாய் வாழ்த்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினரான எட் டேவி எம்.பி. தனது உரையில் பிரதானமாக இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானிய நிறுத்த வேண்டுமென்ற கோரி தமிழ் தகவல் நடுவம் முன்னெடுத்து வரும் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

அதில் அவர், இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த பிரித்தானிய அரசுக்கு முழு அளவிலான அழுத்தத்தை தான் கொடுப்பதாக தெரிவித்தார்.

மேற்படி ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் முன்பிரேரணைக்கான (EDM) மனு எட் டேவி எம்பியின் தலைமையிலேயே கொண்டுவரப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து நெருக்கடியான சூழலில் மனித உரிமைக்காக உழைத்தவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. அதில் மனித உரிமைக்காக பெரும் பங்காற்றி மறைந்த பிரான்சிஸ் சேவியருக்க்கான விருதினை அவருடன் பணியாற்றிய மனித உரிமைகள் வழக்கறிஞர் அழகுராஜா பெற்றுக்கொண்டதுடன் இலங்கையிலுள்ள கத்தோலிக்க பங்குத்தந்தை ஜோசப் மேரிக்குக்கான விருதினை அவரை நன்கறிந்த தமிழ் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர் றேமியன் ரூபராஜன் பெற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து பல்லின மக்களின் அவர்கள் சார்ந்த கலைநிகழ்வுகள் இடம்பெற்றதுடன் தமிழ் தகவல் நடுவத்தின் உறுப்பினர் அனுராஜின் நன்றி உரையுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

தமிழ் தகவல் நடுவத்தின் நடப்பாண்டுக்கான மேற்படி நிகழ்வினை அதன் செயலாளர் வரதகுமார் வைரமுத்து மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கீத் குலசேகரம் ஆகியோர்  வழிப்படுத்தியிருந்ததுடன் பிரதான செயற்பாட்டாளர்களாக அதன் உறுப்பினர்களான புஸ்பதரன் புத்திர சிகாமணி, அஷந்தன் தியாகராஜா மற்றும் றேமிஜன் ரூபராஜன் ஆகியோர்  கடமையாற்றினர்.

அதேவேளை, யெனகன் கிருஷ்ணமூர்த்தி, கஜானன் ஞானசேகரம், ஏ.நிஷாந்தி, காந்தலிங்கம் விநோதன், கிரோஜன் துரையப்பா, லலிதாரூபி வேலாயுதம்பிள்ளை, மகேந்திரலிங்கம் யோகானந், நகுலேஸ்வரன் சிவதீபன், நவரத்தினராஜ் ரட்ணராஜ், நிருஷன் விக்னேஸ்வரன், பற்றிக் அல்பேட் அல்வின் சுகிர்தன், பொன்ராசா புவலோஜன், திலக் அன்றூஸ், ராகவன் ராசலிங்கம், பற்றிக் பீரிஸ் பிரான்சிஸ் வசந்தராஜன், ரமேஸ்கரன் மாணிக்கம், ரனித்தா தியாகேஸ், சிவகுரு சஜூபன், சஞ்ஜீவ தனுசன் வேதநாயகம், சிவலிங்கம் சுரேந்திரராஜ், பிரஷாத் சத்தியசீலன், சுரேஷ் சுப்பிரமணியம் மற்றும் இராசேந்திரம் சுதன் ஆகியோர் இணை செயற்பாட்டாளர்களாக கடமையாற்றியிருந்தனர்.

Print Friendly, PDF & Email