SHARE

யாழில்.குடும்ப பெண்ணொருவரை கடத்தி சென்றதாக கூறப்படும் ஹயஸ் ரக வாகனம் சிற்றூர்தியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

யாழ்.புன்னாலைக்கட்டுவான் சந்தியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்று உள்ளது.

அது குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து ஹயஸ் ரக வாகனத்தில் யாழ்ப்பாணம் வந்த நபர் ஒருவர் சுன்னாகம் பகுதியை சேர்ந்த குடும்ப பெண்ணொருவரை தனது வாகனத்தில் கடத்தி சென்றுள்ளார். அதனை அவதானித்த அவரது கணவர் வாகனத்தை துரத்தி சென்ற போது புன்னாலைக்கட்டுவான் சந்தியில் எதிரே வந்த சிற்றூர்தியுடன் ஹயஸ் வாகனம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

அதேவேளை ஹயஸ் வாகனத்தை துரத்தி வந்த கணவரும் குறித்த விபத்தில் சிக்கியுள்ளார்.

குறித்த விபத்தில் காயமடைந்த கணவனும் கடத்தி செல்லப்பட்டதாக கூறப்படும் மனைவியும் வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குடும்ப பெண்ணை கடத்தியதாக கூறப்படும் நபரை சுன்னாக பொலிசார் கைது செய்து தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Print Friendly, PDF & Email