SHARE
வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம்

தமிழீழ விடுதலை புலிகள் ஜனநாயகத்தை விரும்பவில்லை. என கூறப்படுவது தவறான கருத்தாகும். 1991ம் ஆண்டே தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் எம்மோடு பேசுகையில் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்க முடியாது. ஜனநாயகரீதியான கட்டமைப்பு ஒன்றை உரு வாக்கவேண்டும் என விரும்பினார். அதற்கு நான் மட்டுமல்ல பல வாழும் சாட்சிகள் இருக்கின்ற என  வடமாகாணசபை அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் , முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கே. சயந்தன் தமிழ்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது ஜனநாயக வழியில் நின்றவர்களுக்கும், புலிகளுக்கும் இடையில் செய்யப்பட்ட டீல் மூலமே என கூறிய கருத்து கருத்து தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதி யில் 1991ம் ஆண்டு நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு நான் உட்பட சிலர் சென்றிருந்தோம் அப்போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கூறிய விடயம் தொடர்ந்தும் நாங்கள் போராடி கொண்டிருக்க முடியாது. எனவே ஜனநாயகரீதியான வழிமுறைகளையும் நாங்கள் கையில் எடுக்கவேண்டும் என கூறியிருந்ததுடன், என்னை பிறேமதாஸவிடம் அனுப்பியது முதற்கொண்டு அனைத்தையும் அவர் வழிநடத்தினார்.

மேலும் நாடாளுமன்ற அரசியலிலும் தாங்கள் ஈடுபடவேண்டிய தேவை இருக்கின்றது என்பதையும் அவர்கள் அப்போதே ஏற்றுக் கொண்டார்கள். ஆக மொத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகள் ஜனநாயகத்தை விரும்பவில்லை என்பது தவறான கருத்தாகவே அமையும். அவர்கள் ஜனநாயகத்தை விரும்பினார்கள், ஆயுத போராட்டத்தை மட்டுமே அவர்கள் நம்பியிருக்கவில்லை. இந்த சம்பவங்கள் நடந்து நீண்ட நாட்கள் அல்லது நீண்டகாலம் ஆவதால் சில உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கலாம் அல்லது தெரியாமல் இருக்கலாம். ஆனால் உண்மையில் புலிகளிடம் ஜனநாயகத்தின் மீதான பற்றுதல் எப்போதும் இருந்தது.

அதனாலேயே கிராமங்கள்தோறும் அமைப்புக்கள், குழுக்களை அவர்கள் உருவாக்கினார்கள். ஆகவே இன்று அரசியலில் இருப்பவர்கள் அல்லது இன்று தமிழரசு கட்சியில் இருப்பவர்கள் அந்த காலங்களில் இருந்தவர்கள் அல்ல. அந்த சம்பவங்களுக்கும் இன்றுள்ளவர்களுக்கும் நிறைய இடைவெளிகள் இருக்கின்றது.

மேலும் தமிழரசு கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் புலிகளுக்கு ஆதரவானவர்களும் அல்ல. ஆகவே உண்மையை சொல்லவேண்டிய நிலை உருவானால் உண்மையைச் சொல்லவேண்டும். காரணம் நான் அதற்குள் வாழ்ந்தவன். என்னை யாரும் சவாலுக்குட்படுத்த முடியாது. அதேசமயம் கொலைகள் நடந்தன குறிப்பாக அமிர்தலிங்கம் சுடப்பட்டார், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் அப்போதெல்லாம் நீங்கள் செய்தது தவறு என்பதை புலிகளுக்கே சொன்னவன் நான்.

ஆனால் அந்த கொலைகளுக்கு பின்னால் உள்ள காரணத்தை புலிகள்தான் கூறவேண்டும். அதை நான் கூறமுடியாது. எனக்கு அது தெரியாது. அந்தவகையில் சில தவறுகள் நடந்திருக்கின்றன. ஆனால் மக்கள் அன்னப்பட்சி போல் யார் சரியானவர்கள், யார் பிழையானவர்கள் என்பதை அறிந்து கொள்வார்கள். அறிந்து கொள்ளவேண்டும். மேலும் சிலரை குறைகூற முடியாது. காரணம் அவர்கள் இப்போதுதான் அரசியலுக்கு வந்தவர்கள் என்றார்.

Print Friendly, PDF & Email