SHARE

இரணைமடுக் குளத்திலிருந்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை கூடியவிரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு  வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.

அந்தச் செயற்திட்டம் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தி மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று (18) முற்பகல் இரணைமடுக் குளம் மற்றும் அதன் சீரமைப்புச் செயற்திட்ட அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு பயணம் மேற்கொண்டு நிலமைகளை ஆரய்ந்தார்.

இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 10ஆம் திகதி கிளிநொச்சிக்கு பயணம் மேற்கொண்ட ஆளுநர், இரணைமடு குளத்துக்கும் சென்றிருந்தார். வான் கதவுகளின் திருத்தப்பணிகள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள சம்பந்தப்பட்டவர்களுக்கு அன்றைய தினம் பணிப்புரைகளை வழங்கியிருந்தார். அது தொடர்பிலான முன்னேற்றங்கள் குறித்து ஆராயும் நோக்கிலேயே இன்று திடீர் கண்காணிப்பு பயணத்தை மேற்கொண்டார்.

இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகளில் 07 வான்கதவுகளில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்து இரணைமடு நீர்த்தேக்கத்தை முழுமையாக ஜனவரி 31ஆம் திகதி கையளிக்க இரணைமடு குளத்தை சீரமைப்பு செய்த தனியார் நிறுவனம் உறுதியளித்துள்ளதுடன்  பெப்ரவரி முதல் தொடர்ச்சியாக 06 மாதங்களுக்கு தன்னார்வ ரீதியான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவற்கும் முன்வந்துள்ளது.

இதேவேளை, தற்போது இரணைமடு நீர்த்தேக்கத்தின் 40 வீதமான நீர் மட்டுமே விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதுடன் 60 வீதமான நீர் சமுத்திரத்தை சென்றடைவதாக கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் பிரதிப் பிணிப்பாளரும் இரணைமடு நீர்த்தேக்க செயற்திட்டத்தின் பணிப்பாளருமாகிய பொறியியலாளர்  என்.சுதாகரன் ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

அதனையடுத்து வீணாக சமுத்திரத்திற்கு செல்லும் 60 வீதமான நீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவருவதற்கான சிறப்பு செயற்திட்ட முன்மொழிவை கூடியவிரைவில் தன்னிடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்ட ஆளுநர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இதுதொடர்பில் கலந்தாலோசித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டார்- என்றுள்ளது.

Print Friendly, PDF & Email