SHARE

யாழில்.வாள் வெட்டுக்கும்பலை கட்டுப்படுத்தி விட்டோம் என பொலிசார் மார்தட்டி இரண்டு நாட்களுக்குள் உடுவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வாள் வெட்டு கும்பல் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. 

யாழ்.உடுவில் ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் உட்புகுந்த வாள் வெட்டு கும்பல் வீட்டினுள் பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு, வீட்டில் இருந்த உடமைகளை அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு, வீட்டு வளவில்  நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளையும் தீக்கிரையாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர். 

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேரே தாக்குதலை மேற்கொண்டதாகவும், தாக்குதலாளிகள் தப்பி செல்லும் போது தாம் கொண்டு வந்திருந்த வாள் ஒன்றினை தவறவிட்டு தப்பி சென்றதாகவும் வீட்டில் இருந்தோர் தெரிவித்துள்ளனர். 

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர். 

அதேவேளை கடந்த சனிக்கிழமை யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்த  வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஷாந்த் பெர்ணான்டோ  யாழில் இயங்கிய வாள் வெட்டுக்குழுக்களை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டதாக பெருமையாக அறிவித்திருந்தார் என்பது குரிப்பிடத்தக்கது. 

Print Friendly, PDF & Email