SHARE

பதின்ம வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார்.

யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலையில் சித்திர பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் மாணவியை தண்டிப்பதாக அவரை பாலியல்  துன்புறுத்தலுக்கு உள்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றது. முறைப்பாட்டையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் ஆசிரியரைக் கைது செய்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தினர்

ஆசிரியருக்கு எதிராக 345ஆம் பிரிவின் கீழ் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றில் பொலிஸார் அறிக்கை தாக்கல் செய்தனர்.

சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்தார். எனினும் சிறுமிகளைத் துன்புறுத்துவது பாரதூரமான குற்றம் என்று சுட்டிக்காட்டிய யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல், சந்தேகநபரை வரும் மார்ச் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Print Friendly, PDF & Email