SHARE

மன்னார் புதைகுழியிலிருந்த எடுக்கப்பட்டு அமெரிக்காவிற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட எலும்பு கூடு மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை நீதிமன்றிற்கு உத்தியோக பூர்வமாக கிடைக்கப்பெறும் வரை அதனை பொதுவெளியில் வெளியிட மன்னார் நீதிமன்றம் மறுதலித்துள்ளது.

மன்னார் மனிதப் புதைகுழியின் காபன் பரிசோதனைக்கான அறிக்கை மன்னார் நீதிமன்றத்தினூடாக இன்று (20) புதன்கிழமை வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட போதும் குறித்த அறிக்கை வெளியிடப்படவில்லை.

குறித்த பரிசோதனைக்கான அறிக்கை, உத்தியோகபூர்வமாக மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு   கிடைக்காத நிலையில், கிடைக்கப் பெற்ற அறிக்கையை வெளியிட முடியாது எனவும், பீட்டா நிறுவனத்தில் இருந்து மன்னார் நீதிமன்றத்துக்கு உத்தியோகபூர்வமாக அறிக்கை கிடைத்தவுடன், வெளியிட முடியும் என மன்னார் நீதவான் ரீ.சரவணராஜா இன்று புதன்கிழமை (20) தெரிவித்தார்.

மன்னார் மனித எச்சங்களின் கார்பன் பரிசோதனை அறிக்கையை கடந்த 16 ஆம் திகதி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ, பீட்டா இணையத்தளத்தினூடாகப் பெற்றுக் கொண்டுள்ளார்.மனித எச்சங்களின் 6 மாதிரிகள் மீதான கார்பன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.அவற்றில் 5 மாதிரிகளின் அறிக்கைகள் கடந்த சனிக்கிழமை (16)  பெற்றுக் கொள்ளப்பட்டது.குறித்த அறிக்கையை சட்ட வைத்திய அதிகாரி இன்று புதன்கிழமை காலை மன்னார் நீதிமன்றத்தில் கையளித்தார்.

இந்நிலையில், குறித்த அறிக்கை தொடர்பாக விசாரணைகள் மன்னார் நீதவான் ரி.சரவணராஜா முன்னிலையில் இடம்பெற்றது.இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன்; மன்றில் ஆஜராகி இருந்தார்.இதன் போது குறித்த நிறுவனத்தினர் மன்னார் நீதிமன்றத்திற்கு கார்பன் பரிசோதனை அறிக்கையை அனுப்பி வைக்கும் பட்சத்தில் குறித்த அறிக்கைகள் ஒரு பகிரங்க ஆவணமாக காணப்படும் என்பதால் அதனை எவரும் பெற்றுக்கொள்ள முடியும் நீதவான் மன்றில் தெரிவித்தார்.

இதேவேளை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ ஒரு விண்ணப்பதாரி என்பதால் பரிசோதனைக்கான அறிக்கையை பெற்றுள்ளதாகவும், குறித்த அறிக்கையினை உத்தியோகபூர்வமான அறிக்கையாக மன்னார் நீதிமன்றம் கருதவில்லை எனவும், குறித்த அறிக்கை மன்னார் நீதிமன்றத்துக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டவுடன் அது தொடர்பில் நீதிமன்றத்தினால் அறிவிக்கப்படும் என நீதவான் தெரிவித்ததாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email