SHARE

– மனித உரிமைகள் ஆணையாளர்

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தவறியமைக்காக இலங்கை தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்லே பச்செலெட் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் 20 ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதிகாரபூர்வமாக சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) பகிரங்கமாக வெளியிடபட்டுள்ளது.

அதில் மேலும் ஆணையாளர் தெரிவித்துள்ளதாவது,

“2015 இல ஜெனீவா தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியதன் மூலம் இலங்கை கடந்தகால சம்பவங்களிற்கு தீர்வை காணவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொண்டது.
எனினும் இதனை நோக்கிய தீர்க்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை, இதன் காரணமாக பரந்துபட்ட அதிருப்தி நிலவுகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

போதிய முன்னேற்றம் ஏற்படாதது இலங்கை நிலவரம் தொடர்ந்தும் ஐ.நா. மனித உரிமை பேரவையின் நிகழ்ச்சி நிரலில் நீடிக்கவேண்டியதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.
இலங்கையுடன் தொடர்ந்தும் நெருக்கமான தொடர்பாடல்களை பேண வேண்டும். அதேவேளை இலங்கை நிலவரத்தை தொடர்ந்தும் கண்காணிக்கவேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகள், பலவந்தமாக காணாமலாக்கப்படுதல், யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றில் ஈடுபட்டவர்களை சர்வதேச சட்டங்களுக்கு உட்படுத்தி விசாரணை செய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்பட்டால் அதனை முன்னெடுக்க வேண்டும்.

நம்பகதன்மை மிக்க உள்ளுர் பொறிமுறைகள் காணப்படாத பட்சத்தில் பொறுப்புக் கூறப்படுவதை உறுதி செய்வதற்காக ஏனையவழிமுறைகளை ஆராய வேண்டும்.

இலங்கையில் மனித உரிமைகள் நிலவரத்தை கண்காணிப்பதற்காக முழுமையானஅலுவலகத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்திற்கு அழைப்புவிடுக்க வேண்டும்” எனவும் மனித உரிமை ஆணையாளர் மிச்லே பச்செலெட் பரிந்துரை செய்துள்ளார்.

Print Friendly, PDF & Email