இலங்கையில் நடைபெற்ற கொடூர யுத்தத்தில் காணமல் ஆக்கப்பட்டவர்களை உறவினர்கள் தேடிவரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் இராணுவத்தினரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
துண்டிக்கப்பட்ட தலையை கையில் ஏந்தியவாறு இராணுவ வீரர் இருவர் நின்கின்ற புகைப்படம் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் உலாவி வந்த நிலையில் அப்படத்தில் காணப்படும் கொலை செய்யப்பட்ட நபர் காணாமல் ஆக்கப்பட்ட நாகலிங்கம் ஸ்ரீறிஸ்கந்கராசா என அடையாளம் காணப்பட்டுள்ளது.
1998 ஆம் ஆண்டு மார்கழி இறுதி வாரத்தில் கிளிநொச்சி 8 ஆம் வாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினரால் பிடித்துச்செல்லப்பட்ட 22 பேரில் ஒருவரே ஸ்ரீறிஸ்கந்கராசா ஆவர்.
காந்தன் என்று அழைக்கப்படும் நாகலிங்கம் ஸ்ரீறிஸ்கந்கராசா தனது சகோதரியின் கணவன் பரமேஸ்வரனுடன் வீடுபார்ப்பற்காக கிளிநொச்சி உருத்திரபுரம் 8ஆம் வாய்க்கால் பகுதிக்கு சென்றிருந்தார்.
அப்பகுதியை நோக்கி இராணுவம் பின்பக்கமாக வருவதை கண்டு அங்கிருந்த பலர் தப்பியோடிவிட்டனர். இதன் போதே இராணுவத்தினரால் அன்று 22 பேர் பிடித்து செல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டிருந்தவர்களில் மீதி 21 பேரின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது. புகைப்படம் கண்டெடுக்கப்பட்ட இராணுவமுகாம் திருநகரில்ஒரு சித்திரவதை முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.