SHARE

யாழ். மானிப்பாய் உடுவில் பகுதிகளில் இன்றையதினம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் எண்மர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் 3 வாள்கள், ஒரு சுழியோடிக் கண்ணாடி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன. அவர்கள் வாள்வெட்டுக்குச் செல்லும் போது சுழியோடி கண்ணாடியை அணிந்தவாறு செல்வது அவர்களின் கைபேசியில் மீட்கப்பட்ட ஒளிப்படங்களின் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும் வாள்களில் தமது பெயர்களைப் பொறித்து வைத்திருப்பதும் அந்த ஒளிப்படங்களில் காண முடிகிறது என்று பொலிஸார் கூறினர்.

மானிப்பாய் அண்மைய நாள்களில் அடுத்தடுத்து வீடுகளுக்குள் புகுந்து வாள்வெட்டுக் கும்பல் ஒன்று அடாவடியில் ஈடுபட்டு வந்தது.

கடந்த புதன்கிழமையும் மானிப்பாய் இந்துக் கல்லூரி ஒழுங்கை மற்றும் நகர்ப்பகுதியிலுள்ள வீடு என மூன்று வீடுகளுக்குள் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோவின் பணிப்பில் சிறப்பு தேடுதல் நடவடிக்கை புத்தாண்டு தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, மானிப்பாய், கட்டுடைப் பகுதியில் 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர். அத்துடன், கும்பலைச் சேர்ந்த லக்கி என்பவர் தலைமறைவாகியுள்ளார். அவரைக் கைது செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மானிப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்து கண்காணித்ததுடன்,

சந்தேகநபர்களிடம் மீட்கப்பட்ட ஒளிப்படங்களில் உள்ள அனைவரையும் கைது செய்யுமாறு மானிப்பாய் பொலிஸாருக்குப் பணித்தார்.

Print Friendly, PDF & Email