முள்ளிவாய்க்கால் சிறப்புப்பீடம், தமிழீழ தாயக கட்டமைப்பு என்பவற்றை கண்முன்னே கொண்டுவரும் பிரத்தியோக பகுதிகள்
தமிழரின் வரலாறு, பாரம்பரியம், மற்றும் மரபு ஆகியவற்றையும் தமிழர்களுக்கு எதிராக சிங்களப்பேரினவாதத்தால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையையும் வெளிக்கொணரும் வகையில் இலங்கைத் தமிழர்கள் காலவரையறையற்றதொரு பாரம்பரியம் எனும் மாபெரும் கண்காட்சி பிரித்தானியாவில் இன்று நடைபெறுகிறது.
தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் நீண்டதொரு திட்ட நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள இக் கண்காட்சியானது முள்ளிவாய்க்கால் தினமான இன்று (18 )மற்றும் 19 ஆம் திகதிகளில் பிரித்தானியவின் Tolworth Recreation Centre எனும் இடத்தில் நடைபெறுகிறது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை அதன் பேரவலத்தை உணர்வுபூர்வமாக கண்முன்னே கொண்டு வரும் வகையில் வலி சுமந்த நினைவுகளை அதன் பதிவுகளை தாங்கியவாறு முள்ளிவாய்க்கால் கூடம் மற்றும் தமிழீழ கட்டமைப்பை பிரதிபலிக்கும் பிரமாண்ட அரங்கு என்பன விஷேடமாக அமைக்கப்பட்டுள்ளது.
தவிர, இலங்கைத்தீவில் தமிழ் மொழியால் ஒன்றிணைந்துள்ள அனைத்து தரப்பினரின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் அரசியல் பண்பாடுகளை பிரதிபலிக்கும் படைப்புக்கள் இலக்கியங்கள் ஆராய்ச்சிகள் ஒளிப்படங்கள் ஆவணப்படங்கள் ஓவியங்கள் கார்ட்டூன்கள் மற்றும் கலைப்பொருட்கள் என்பன இக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
அத்துடன், சமூக செயல்முறை பட்டறைகள் விரிவுரைகள் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் சிறுவர்கள் மற்றும் குடும்பத்தினர் பங்களிக்கக்கூடிய அம்சங்கள் ஆகியன இக்கண்காட்சியை மேலும் மெருகூட்டியுள்ளன.