SHARE

150 க்கும் மேற்பட்டோரின் உயிர்களைக் காவுகொண்ட நவாலித் தேவாலயத் தாக்குதலின் 24ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்பாணம் நவாலி – பேதுரு தேவாலயம் (சென். பீற்றர்ஸ்) மீது இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் 150 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு, 150 பேருக்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருந்தனர்.

இந்தச் சம்பவம் இடம்பெற்று இன்று (செவ்வாய்க்கிழமை) 24 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. ஆனாலும் அன்றைய கோரத் தாக்குதலின் துயரிலிருந்து மக்கள் இன்னும் மீளவில்லை.

அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களில் பலர் தற்போதும் நிர்க்கதியான நிலையில் சொல்லொணாத் துயரத்துடனேயே வாழ்கின்றனரென்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவாக நோக்கினால், குறித்த காலப்பகுதியில், வலிகாமம் பகுதியில் இலங்கைப் படையினரால் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளில் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

யாழ். குடாநாட்டைக் கைப்பற்றும் நோக்கில் முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்த இராணுவத்தினர், மாதகல், பண்டத்தரிப்பு,  பொன்னாலை போன்ற பகுதிகளிலிருந்து முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

முன்னேறிய இராணுவத்தினருக்கு ஆதரவாக பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் ஷெல் தாக்குதல்களையும் குண்டுத்தாக்குதல்களையும் மக்கள் குடியிருப்புகளை நோக்கி மேற்கொண்டிருந்தனர்.

இதன்காரணமாக பொதுமக்கள் கையில் அகப்பட்ட பொருட்களுடன் வெளியேறிக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் இந்த கொடூரச் சம்பவம் அரங்கேறியிருந்தது. 1995ம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி இதேபோன்றதொரு நாளிலேயே குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும் நவாலி சின்னக் கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர்.

அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்துகொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது. இரண்டு ஆலயங்களும்  தாக்குதலில் பலத்த சேதமடைந்தன.

இத்தாக்குதலில் ஆலயங்களில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 150 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர். அத்தோடு அவயங்களை இழந்தும் உறவுகளை இழந்தும் 150இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 24 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. ஆனால் எம் மக்களின் மனங்களில் நீங்காதுள்ள ரணங்களுக்கு இதுவரையில் மருந்தில்லை.

Print Friendly, PDF & Email