SHARE

முல்லைத்தீவு உண்ணாப்பிலவு பகுதியில் உள்ள றோமன் கத்தேலிக்க பாடசாலையில் தரம் 7 இல் கல்வி கற்று வரும் தீர்த்தக்கரை சிலாவத்தையினை சேர்ந்த 12 வயதுடைய இ. லிந்துசியா (சீனு) என்ற மாணவி கடந்த 29.07.19 அன்று உயிரிழந்துள்ளமை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு காவல்துறையினருக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் பணித்துள்ளார்.

இது தொடர்பில் தெரிய வருகையில், குறித்த மாணவி கடந்த 29 ஆம் திகதி அன்று பாடசாலை சென்ற வேளை பாடசாலையில் இழுப்பு (சுவாசநோய்) காரணமாக உயிரிழந்துள்ளமை தெரிய வந்துள்ளது.

குறித்த மாணவிக்கு பாடசாலை நேரத்தின் போது பகல் 12.30 மணிக்கு இழுப்பு நோயால் சுவாசிக்க அவதிப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதன் பின்னர் பிற்பகல் 2 மணிக்கே முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமியினை அனுமதித்துள்ளார்கள்.

மரண விசாரணை அதிகாரிகளின் விசாரணைகளின் பின்னர் சடலம் பெற்றோர்களிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்கு பணிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நிர்வாகத்தின் கவனயீனமே மாணவியின் உயிரிழப்பிற்கு காரணம் என பெற்றோர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு காவல்துறைக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பணித்துள்ளார்.

Print Friendly, PDF & Email