SHARE

பயங்கரவாதி சஹரானுடன் தொடர்புடையதாகத் தெரிவித்து 16 வயதான சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்தின் சஹரானுக்கு அடுத்தநிலை தலைவரான நௌபர் மௌலவியின் மகனான நௌபர் அப்துல்லா என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குருநாகல், ஹெக்குனுகொல்ல பகுதியைச் சேர்ந்த இவர் அம்பாறை புறநகர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.

தீவிரவாதி சஹரானினால் நுவரெலியாவில் நடத்தப்பட்ட பயிற்சியளிப்பு நடவடிக்கையில் இணைந்துகொண்டு பயிற்சி பெற்றுக்கொண்டதாக இவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதேவேளை, தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷீமுடன் நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை முகாம்களில் பயிற்சி பெற்றதாக தெரிவிக்கப்படும் 3 பேர் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் ஜமாத்தே மில்லத்தே இப்ராஹிம் அமைப்பின் உறுப்பினர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, சஹ்ரான் தொடர்பான விசாரணைக்காக அவரின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானதுடன் சஹ்ரானின் வீடு அமைந்துள்ள காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த சாட்சியாளர்கள் இருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email