செல்வச் சந்நிதி பாலத்தின் ஊடான போக்குவரத்து இன்று (சனிக்கிழமை) 11 மணி முதல் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.
செல்வச் சந்நிதி ஆலயத்திற்கு சூரன் போருக்கு வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் வடக்கு பகுதிகளில் இருந்து செல்லும் பக்தர்கள் ஆலயத்தினை அடைவதற்கான வசதிப்படுத்தலாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சூர சம்காரத்திற்காக பெருந்தொகை பக்தர்கள் வலிகாமம் கிழக்கு மற்றும் வலிகாமம் வடக்கினூடாக செல்வச் சந்நிதி ஆலயத்தினை சென்றடைவர்.இந்நிலையில் இப்பாதை திறக்கப்படுவதன் அவசியம் குறித்து வலி கிழக்குப் பிரதேச சபையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்தே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போக்குவரத்திற்கான பாலத்தினை திறந்துவிடும் ஏற்பாடுகளை நீர்ப்பாசனத்திணைக்களமும் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீச்சல் பிரிவினரும் ஒளியூட்டல் மற்றும் வாகனத்தரிப்பிடம் உள்ளிட்ட வசதிப்படுத்தல்களை வலிகிழக்கு பிரதேச சபையும் பொறுப்பேற்றுள்ளன.