SHARE

ஜனநாயக உரிமையை மக்கள் பயன்படுத்த வேண்டுமென  யாழ். மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது,

“தேர்தலில் வாக்களிப்பது ஒரு ஜனநாயக உரிமை. இந்த உரிமையை மக்கள் அனைவரும் எவரின் கட்டாயமுமின்றி தெளிந்த மனதுடனும் தீர்க்கமான முடிவுடனும் பயன்படுத்த வேண்டும்.

தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்றோ அல்லது தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ ஜனநாயக சூழலில் யாரையும் கட்டாயப்படுத்த யாருக்கும் உரிமை கிடையாது. தேர்தலைப் புறக்கணிப்பதால் இழப்படையப்போவது தேர்தலைப் புறக்கணிப்பவர்களே அன்றி வேறுயாருமல்ல.

ஒருபோதும் வெல்ல மாட்டார்கள் எனத் தெரிந்தும் வாக்குக்களை சிதறடிக்க பல வேட்பாளர்களை களத்தில் இறக்குவது  தேர்தல் இராஜதந்திரம் எனக் கருதப்பட்டாலும் இலங்கை நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்தையும் விரும்பாதவர்களின் செயற்பாடகவே இது கருதப்பட வேண்டும்.

தமிழ் மக்கள் தமது எதிர்கால வாழ்வை மிகுந்த கவனத்துடன் எடுத்து இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். தேர்தல் அறிக்கைகள் அநேக விடயங்களை எடுத்து சொல்லுகின்றன. எந்த தேர்தல் அறிக்கையிலும் வெளியிடப்பட்ட விடயங்கள் ஒருபோதும் முழுமையாக நிறைவேற்றப்பட்டதாக சரித்திரம் இல்லை.

தமிழ் மக்களின் சுபீட்சமான எதிர்காலத்திற்கு நம்பிக்கை தரத்தக்க நல்ல தலைவரை இனங்கண்டு தகுதியானவருக்கு வாக்களிங்கள் என்று தமிழ் மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email