SHARE

– சம்பந்தன் கோரிக்கை

எதிர்காலத்தில் சர்வதேச ரீதியாகவும் உள்நாட்டில் நிறைவேற்ற வேண்டிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றால் தமிழ் மக்கள் தமது ஆணையை முழுமையாக தங்களுக்கு வழங்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மக்களின் ஆணையில் ஒரு பகுதி கூட வேறு யாருக்கும் போகக்கூடாது எனவும் வலியுறுத்தினார்.

மேலும் கடந்த காலங்களில் எமக்கு வழங்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட வேண்டும். அதன் பிரகாரமே நாம் செயற்ப்பட்டு வருகின்றோம் எனவும் அவர் கூறினார்.

விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் நாம் நியாயமான அரசியல் தீர்வொன்றைக் காணுவோம் என அரசாங்கம் அளித்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே விடுதலை புலிகளை அழிக்க இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் ஆதரவு வழங்கியது.

ஆனால் தற்போது விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த வாக்குறுதிகளில் இருந்து தப்பிச்செல்ல அர்சனத்தில் உள்ளவர்கள் முயற்சிக்கின்றனர் என குற்றம் சாட்டிய இரா.சம்பந்தன் இதற்கு சர்வதேச சமூகம் இடமளிக்க கூடாது என வலியுறுத்தினார்.

அத்தோடு நாம் சிங்கள மக்களையும் சிங்கள தலைவர்களையும் பகைக்க விரும்பவில்லை எனவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email