SHARE

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் மணல் அகழ்வு செய்யப்பட்டதையடுத்து பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

மன்னார் தோட்டவெளி கிராமத்தில் உள்ளூர் நிர்வாக அதிகாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் இன்றி தென்பகுதி அரசியல்வாதிகளின் அனுமதிப் பத்திரங்களை மீன் வளப்புக்கென கையில் வைத்திருப்பதாகத் தெரிவித்து பொலிஸாரின் துணையுடன் மணல் அகழ்வு செய்து வெளி இடங்களுக்கு எடுத்துச் சென்ற வேளையில் இந்த முரண்பாடு ஏற்பட்டது.

இன்று (புதன்கிழமை) ஏற்பட்ட முறுகல் நிலையால் அப்பகுதியில் சில மணி நேரம் அமைதியற்ற நிலையில் காணப்பட்டது.

மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வருகை தந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது, மன்னார் வேத சாட்சிகளின் ஆலயம் அமைந்துள்ள தோட்டவெளி பகுதியில் தென் பகுதியிலிருந்து மீன் வளர்ப்புக்கு என கொண்டு வரப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு இங்கு மீன் வளப்புக்கென எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளப்படாது மணல் அகழ்வு செய்யப்பட்டு மண் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் நீண்ட நாட்களாக இடம்பெற்று வருகின்றன.

குறித்த விடையம் தொடர்பாக இப்பகுதி மக்கள் மன்னார் பிரதேச சபை, மன்னார் பிரதேச செயலாளர் மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் முறையீடு செய்தும் எவ்வித பலனும் கிடைக்காத நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை இப்பகுதியில் மணல் அகழ்வு செய்ய வேண்டாம் என இப்பகுதி பங்குத் தந்தை அருட்பணி அலெக்சாண்டர் பெனோ சில்வாவின் தலைமையிலான இப்பகுதி கிராம அபிவிருத்தி சங்கத்தினருக்கும் மணல் அகழ்வு செய்வோருக்கும் இடையில் ஓர் கலந்துரையாடல் நடைபெற்று சுமூக நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இக்கலந்துரையாடல் இடம்பெற்று சற்று நேரத்தின் பின் பொலிஸ் அதிகாரி ஒருவரின் பாதுகாப்பில் மீண்டும் மணல் அகழ்வு செய்து வெளியில் எடுத்துச் செல்லப்பட்ட வேளையில் அப்பகுதி மக்கள் மணல் ஏற்றிச் சென்ற வாகனத்தை செல்ல அனுமதிக்காது வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சம்பவ இடத்துக்கு வந்த பங்குத் தந்தையுடனும் பொது மக்களுடனும் சம்பவ இடத்தில் நின்ற பொலிஸ் அதிகாரி முரண்பட்டதால் நிலைமை மோசமாகியது.

இச்சம்பவத்தை அறிந்து மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஏ.விக்ரர் சோசை அடிகளார், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.கிறிஸாந்தன் மற்றும் அருட்பணியாளர்கள் கிறிஸ்ரியன் வாஸ், ஆரோக்கியநாதன் அடிகளார் ஆகியோர் இவ் இடத்துக்கு விரைந்து வந்திருந்தனர்.

அருட்பணியாளருடன் முறுகல் நிலையை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரி அருட்பணியாளரிடம் மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து அங்கு சுமூக நிலை ஏற்பட்டது.

Print Friendly, PDF & Email