வன்முறையை கட்டுப்படுத்தவென்ற பேரில் தமிழ் மக்களை அச்சமூட்டும் தேடுதல்கள் யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அரச ஆதரவு தொலைக்காட்சிகள் உள்ளிட்ட ஊடகங்கள் யாழில் வன்முறையை கட்டுப்படுத்த முப்படை களமிறங்கியதாக பிரச்சாரப்படுத்த தேடுதல்களில் காவல்துறைக்கு மேலதிகமாக அதிரடிப்படையும்,இராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் வழிப்பறி மற்றும் வன்முறைச் சம்பவங்களினை கட்டுப்படுத்தும் முகமாக முப்படையினரும் களமிறக்கப்பட்டுள்ளதாக காலை முதல் அரச ஆதரவு தொலைக்காட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளன.
இன்றைய தினம் யாழ்ப்பாணம் நல்லூரை அண்டிய பகுதிகளில் சோதனை நடவடிக்கையில் இத்தரப்புக்கள் ஈடுபட்டதோடு சந்தேகத்துக்கிடமான வீடுகள் மற்றும் பொது இடங்களிலும் தேடுதல் நடத்தினர்.
காலை முதல் ஆரம்பிக்கப்பட்ட இச்சோதனை நடவடிக்கை மக்களிடையே பரபரப்பினையும் அச்சத்தையும் தோற்றுவித்திருந்தது.
குறிப்பாக இன்று பொதுவிடுமுறை தினமாகையால் குடும்பங்கள் பலவும் வீடுகளில் தங்கியிருந்த நிலையில் சோதகைள் அரங்கேறின.
ஏற்கனவே டெங்கு ஒழிப்பென்ற பேரில் களமிறங்கிய தரப்புக்கள் தற்போது வன்முறையை கட்டுப்படுத்தவென்ற பேரில் தமிழ் மக்களை அச்சமூட்டும் நடவடிக்கைகளில் குதித்துள்ளன.