SHARE

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், 1050 ஆவது நாளான  இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்கள் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் அண்மையில் சிறையில் மரணமடைந்த தமிழ் அரசியல் கைதியின் திருவுருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி  அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து அவர்கள், தங்களது இணைப்பாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து கோசங்களை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளின் புகைப்படங்களையும் கையில் ஏந்தியிருந்தனர்.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவுகளை தேடித் தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்  தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனாலும் மாறிமாறி வரும் அரசாங்கங்கள் இவர்களின் பிரச்சினைக்கு சரியானதொரு தீர்வை முன்வைக்காத நிலையில் அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, காணாமலாக்கப்பட்டதாகக் கூறப்படும் அனைவரும் யுத்த காலத்திலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email