SHARE

ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “அனைத்து மக்களினதும் பன்முகத்தன்மையையும் சமத்துவத்தினையும் அங்கீகரிக்கும் ஒன்றிணைந்த, பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டிற்குள் தீர்வொன்றினை எட்ட தமிழ் மக்கள் இன்னமும் தயாராக இருக்கின்றார்கள்.

எமது கட்சியான இலங்கை தமிழரசு கட்சி அல்லது ‘பெடரல் கட்சி’ என அறியப்பட்ட கட்சி குடியுரிமை சட்டத்தின் விளைவாக பிறந்த ஒரு கட்சியாகும். இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டமானது முதலாவது நாடாளுமன்றத்தில் 7 அங்கத்தவர்களை கொண்டிருந்த கிட்டத்தட்ட 8 இலட்சம் மக்களின் வாக்குரிமையை இரத்து செய்தது.

பெரும்பான்மையினரின் விருப்பம் என்ற ரீதியிலேயே ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையை இது பறித்தது. மேலும் அவர்களுடைய குடியுரிமையையும் இல்லாமல் செய்தது.

சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்றத்தின் பேரினவாத செயற்பாடு காரணமாகவே இலங்கை தமிழரசுக், கட்சி எம் இன அடிப்படையிலான ஒரு கட்சியாக உருவாகுவதற்கான தேவை உண்டாக்கியது என்பதனை இந்த நாட்டு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

யுத்தம் முடிவடைந்ததும் இந்தியா உட்பட சர்வதேச சமூகத்திற்கு தமிழ் மக்களின் தேசிய பிரச்சினை அரசியல் ரீதியாக அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடக தீர்க்கப்படும் என்ற உறுதியை ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் வழங்கியிருந்தது.

இந்த உறுதிமொழி குறைந்தது மூன்று தடவை இந்தியாவிற்கு வழங்கப்பட்டது. அதிலே 13 ஆவது திருத்தமும் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வினை அடையும் நோக்கில் 13ஆவது திருத்தச் சட்டம் மேலும் கட்டியெழுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமுலாக்கம் என்பது தேசிய மொழியிலான தமிழ் மொழியில் முழுமையான அமுலாக்கத்தினையும் உள்ளடக்குகின்றது.

ஒவ்வொரு மக்களின் சமத்துவம் என்பது அவர்களின் எண்ணிக்கையின் பலத்தில் தங்கியிருக்கவில்லை. எமது ஜனநாயகமானது தப்பித்துக்கொள்ளவும் செழிப்படையவும் வெளிப்படையான பேரினவாதத்தை நோக்கி செல்லாமல் இருக்க வேண்டும் என்றால், இந்த கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

சிங்கப்பூர் நான்கு தேசிய மொழிகளை கொண்ட நாடு. அவர்களின் தேசிய கீதமானது மொத்த சனத்தொகையில் 15% மாத்திரம் பேசும் மலே மொழியில் இசைக்கப்படுகிறது” என எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

Print Friendly, PDF & Email