SHARE

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தாக்கம் அந்த நாட்டையும் தாண்டி உலகத்தில் பல நாடுகளையும் ஆட்டம் காணவைத்துள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த நாட்களில் பல மடங்காக அதிகரித்துள்ளது.

அந்தவகையில் இலங்கையில் இதுவரை 467 பேர் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அடையாளம் காணப்பட்ட 460 பேரின் மாவட்ட ரீதியான முழுமையான விபரங்களை சுகாதார அமைச்சு இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ளது.

அதன்படி மேல் மாகாணத்தில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது. அந்த மாகாணத்தில் கொழும்பில் 154 பேரும் களுத்துறையில் 59 பேரும் கம்பஹாவில் 34 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை வடமேல் மாகாணத்தில் புத்தளத்தில் 37 பேரும் குருநாகலில் 12 பேரும் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தில் 16 பேரும் வவுனியாவில் ஒருவரும், மத்திய மாகாணம் கண்டியில் 07 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் சப்ரகமுவா மாகாணத்தில் இரத்தினபுரியில் 06 பேரும், கேகாலையில் 5 பேரும், தென் மாகாணத்தில் மாத்தறையில் 02 பேரும் காலியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஊவா மாகாணத்தில் பதுளையில் 02 பேரும் மொனராகலையில் 2 பேரும் கிழக்கு மாகாணத்தில் அப்பாறையில் 02 பேரும் மட்டக்களப்பில் ஒருவரும் வடமத்திய மாகாணத்தில் அனுராதபுரத்தில் 04 பேரும் பொலன்னறுவையில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்தோடு வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்களை தனிமைப்படுத்திய மையங்களில் 41 பேரும் இலங்கை திரும்பியிருந்த 03 வெளிநாட்டு பிரஜைகளுக்கும் வெலிசர கடற்படை முகாமில் 68 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இதுவரை 467 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 120 பேர் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

Print Friendly, PDF & Email