SHARE

யாழ்ப்பாணம் – அராலிதுறையில் உள்ள இராணுவ முகாமில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு  அப்பகுதியில் உள்ள மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அராலி துறையில் அமைந்துள்ள இராணுவ முகாமில் நேற்று (28) தொடக்கம் குறித்த இராணுவ முகாம் தவிர்ந்த வெளியாட்கள் தொடர்ச்சியாக அங்கு அழைத்துவரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்து அயல் கிராம மக்கள் இன்று (29) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது இராணுவ முகாமில் கொரோனா நோய் சந்தேக நபர்களை தனிமைப்படுத்தினால் அது தமக்கு ஆபத்தானதாக அமையும் எனவும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அருகில் உள்ள தாம் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் என்றும்  மீன்பிடித்தொழில் மேற்கொள்வது சிக்கலானதாக மாறும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனால் தமக்கும் இராணுவத்துக்கும் பாதிப்பில்லாத பொருத்தமான இடத்தில் இத்தகைய தனிமைப்படுத்தல் நிலையங்களை அமைக்குமாறும் மக்கள் செறிவாக வாழ்கின்ற இந்தப் பகுதியில் இராணுவத்தின் முகாமில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் அந்த  மக்கள் மேலும் தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email