SHARE

யாழ்ப்பாணம் – கொக்குவில் ஆடியபாதம் வீதியில் உள்ள வெள்ளநீர் வடிகாலுக்குள் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வடிகாலுக்குள் வெடிக்காத நிலையில் கைக்குண்டு இருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது குறித்த யாழ். பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தனர்.

பின்னர், பொலிஸார் சம்பவ இடத்துக்கு வர முன்னர் அங்கு சென்ற இராணுவத்தினர் குறித்த கைக்குண்டை அங்கிருந்து மீட்டுச் சென்றனர்.

எனினும், குறித்த பகுதிக்கு வந்த இராணுவ உயர் அதிகாரிகள், அங்கிருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டை மீண்டும் அவ்விடத்தில் வைக்குமாறு கைக்குண்டை மீட்ட இராணுவ சிப்பாயை அறிவுறுத்தியிருந்தனர்.

இதன்படி கைக்குண்டை மீட்டுச் சென்ற இராணுவச் சிப்பாய் மீண்டும் அவ்விடத்துக்கு கைக்குண்டுடன் வந்திறங்கினார்.

இதன்போது குறித்த சிப்பாயை கடுமையாகப் பேசிய இராணுவ உயர் அதிகாரி, குறித்த சிப்பாயை பொது மக்கள் முன் தாக்கி உடனடியாக கைக்குண்டை இருந்த இடத்தில் வைக்குமாறு கூறினார்.

மீண்டும் குறித்த வடிகாலுக்குள் இறங்கிய அந்த இராணுவச் சிப்பாய் இருந்த இடத்திலேயே கைக்குண்டை வைத்துவிட்டு அங்கிருந்து சென்றார். இதன்பின்னர் சம்பவ இடத்துக்குப் பொலிஸார் வரவளைக்கப்பட்டனர்.

விசாரணைகளின் பின் மீண்டும் கைக்குண்டு அங்கிருந்து இராணுவத்தினரால் முன்னர் போன்றே எடுத்துச் செல்லப்பட்டது.

இராணுவத்தால் கைக்குண்டு அங்கிருந்து அகற்றப்பட்டமை மற்றும் மீண்டும் கொண்டுவந்த வைக்கப்பட்ட சம்பவங்களை புகைப்படங்கள் எடுத்த அப்பகுதி இளைஞர்களை விசாரணை நடத்திய புலனாய்வுப் பிரிவினர் அவர்களுடைய கையடக்க தொலைபேசியில் இருந்த புகைப்படங்களை அழித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email