இந்தியாவின் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் இன்று அதிகாலை விஷவாயு கசிந்து வெளியானதில், அந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். சுமார் 3ஆயிரம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் விஷவாயு கசிவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திரா விசாகப்பட்டினம் அருகே உள்ள வேங்கடபுரம் பகுதியில் உள்ள எல்.ஜி. பாலிமர்ஸ் ரசாயண தொழிற்சாலையில், இன்று அதிகாலை 2:30 மணியளவில் பாலி வினைல் குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயு அந்த பகுதி முழுவதும் சூழ்ந்திருந்தது.
இதுகுறித்து அறியாத பலர் தூங்கி எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்த நிலையில், குளோரின் வாயுவினால் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர்.
இந்த விஷவாயு விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ள நிலையில் தற்போது பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் 3000க்கும் அதிகமானோர் பாதிப்பினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.