SHARE

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 3வது நாள் நிகழ்வை மீண்டும் இலங்கை காவல்துறை குழப்ப முற்பட்டுள்ளது.

இன்றைய தினம் யாழ்.நகரிலுள்ள தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவு தூபி முன்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சுடரேற்றல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்றும் பங்கெடுத்தவர்களை காவல்துறை புகைப்படம் பிடித்து அச்சுறுத்த முற்பட்டுள்ளதுடன் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்களையும் படம் பிடிக்க முற்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

யாழ்.காவல்நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளர்களை தனது கைப்பேசியில் புகைப்படம் பிடிக்க பதிலுக்கு ஊடகவியலாளர்கள் அதனை படம் பிடித்து  ஊடக அடக்குமுறையினை அம்பலப்படுத்தியிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் மண்டைதீவு, புனித ஜாகப்பர் தேவாலயம், தமிழாராச்சி மாநாட்டு படுகொலைகளில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அஞ்சலி செலுத்தியிருந்தது.

Print Friendly, PDF & Email