சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் சாஞ்சி பயணத்தினால், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் தொடக்கம், சாஞ்சி வரையிலான கிராம மக்கள் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டார்கள் என்பது குறித்த தகவல்களை ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ வெளியிட்டுள்ளது.
போபாலுக்கும் சாஞ்சிக்கும் இடைப்பட்ட 45 கி.மீ நீளமான பிரதேசத்தில் உள்ள ஒரு டசினுக்கும் அதிகமான கிராமங்களில் நேற்று அறிவிக்கப்படாத ஊரடங்குச்சட்டம் நடைமுறையில் இருந்தது.
சாஞ்சியிலும், போபால் தொடக்கம் சாஞ்சி வரையிலான நிலையங்களிலும் வழக்கமாக நின்று செல்லும் எந்தத் தொடருந்துகளும் நிறுத்தப்படவில்லை.
பேருந்துகளையும், கார்களையும் வீதிகளில் காணமுடியவில்லை.
கடைகள், விடுதிகள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சாஞ்சியில் பௌத்த பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்ட வந்ததால் தான், இந்தளவுக்கு உச்சக்கட்ட பாதுகாப்புக் கெடுபிடி.
வைகோவின் ஆதரவாளர்கள் போபால் மற்றும் அதைச் சார்ந்த பிரதேசங்களில் நுழைந்துள்ளதாக கிடைத்த தகவலால், போபால் தொடக்கம் சாஞ்சி வரையான பகுதிகளில் கடுமையான பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது.
சாஞ்சியில் இருந்து, கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டு காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர்.
போபாலின் புறநகர் கிராமமான சுகிசெவனியா தொடக்கம் சாஞ்சி வரையான கிராமங்களில் இருந்த கிராமவாசிகள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அவர்கள் வீதிக்கு வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தார்கள்.
கிராமவாசிகளுக்கு அது மிகக்கடுமையான நேரமாக இருந்தது.
“நாம் எமது வீடுகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம்” என்கிறார்கள் அவர்கள் வருத்தத்துடன்.
“நான் வெள்ளிக்கிழமை போபாலுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் பேருந்துகள், தனியார் வாகனங்கள் உள்ளிட்ட எல்லா வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்ததால், வீடு திரும்புவதை விட எனக்கு வேறுவழி இருக்கவில்லை.
காவல்துறையினர் எம்மை வீட்டுக்கு வெளியே வரவே அனுமதிக்கவில்லை“ என்றார் ராம்பாபு என்ற கிராமவாசி.
நிகழ்வுக்கு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே, வீதியில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள்.
போபாலுக்கும், சாஞ்சிக்கும் இடைப்பட்ட சுகிசெவனியா, சலமத்பூர், டீவங்கன்ஜ், பீர்கேடி, சோப்டாகலன், ரட்டலாய் உள்ளிட பல கிராமங்களில் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.
போபால் சாஞ்சி இடையே, பொதுப்போக்குவரத்து ஒரு நாள் முன்னதாகவே நிறுத்தப்பட்டு விட்டது.
வெள்ளிக்கிழமை அதிகாலையில் இருந்தே, தனியார் வாகனங்களையும் காவல்துறையினர் வீதிகளில் அனுமதிக்கவில்லை என்று ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா‘ குறிப்பிட்டுள்ளது.