விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்கு நோர்வேயின் சமாதானத் தூதுவராக இருந்த எரிக் சொல்ஹெய்முக்கு 30 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
“சொல்ஹெய்ம் உயர்நிலைப் பங்கு வகித்த போதிலும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிந்தனையையும் அவரது இலக்குகளையும் புரிந்து கொள்ளத் தவறிவிட்டார்.
போரின் இறுதிக்கட்டத்தில், போர்வலயத்தில் சிக்கியிருந்த தன்னையும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏனையவர்களையும் கடல்வழியாக மீட்பதற்கு அனைத்துலக சமூகம் முன்வைத்த யோசனையை பிரபாகரன் நிராகரித்து விட்டார் என்று சொல்ஹெய்ம் கூறியுள்ளார்.
இது பிரபாகரனின் நோக்கங்களையும் அடிப்படை இலக்குகளையும் சிறிலங்கா அரசு நன்றாகவே புரிந்து வைத்திருந்தது என்பதை நிரூபித்துள்ளது” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.