SHARE

தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கோப்பாப்புலவு மக்கள் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் தமது போராட்டத்தை தொடரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின் குமார் அனுமதியளித்துள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று குழப்பத்தில் ஈடுபட்டதாக ஐவருக்கு எதிராக பொலிசார் தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் இந்த அனுமதியை அளித்தார்.

கோப்பாப்புலவுப் பகுதியில் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்கக்கோரி அப்பகுதி மக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பகுதியளவிலான சில காணிகள் விடுவிக்கபட்ட நிலையிலும் முழுமையா விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்த மக்கள் தொடர்ந்தும் போராடி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்த மக்கள் விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு செல்ல முற்பட்டவேளை பொலிசார் வழி மறித்தமையினால் குழப்பநிலை தோன்றியிருந்தது. இதனியடுத்து குழப்பத்தில் ஈடுபட்டதாக ஐவருக்கு எதிராக பொலிசார் முல்லை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்தவகையில் குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் வரா வகையில் மக்கள் தமது உரிமைக்காக போராடலாம் என தெரிவித்த நீதவான் போராட்டத்தை தொடர அனுமதியளித்தார்.

Print Friendly, PDF & Email