SHARE
முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வழமைக்கு மாறாக கடலில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க ஆய்வு குழுவொன்று முல்லைத்தீவுக்கு சென்றுள்ளது.
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இருந்து பல சந்தர்ப்பங்களில் முல்லைத்தீவு கடல் தன்மையில் மாற்றம் உள்ளதாகவும், நீர் மட்டம் 5 அடி அதிகரித்ததாகவும், பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
பல முறை கடல் கொந்தளித்து கடல் நீர் நிறம் வித்தியாசமாக காணப்பட்டதாகவும், அதனால் சுனாமி ஏற்படும் என அஞ்சியவர்கள் கடலில் பூஜை ஒன்றையும் நடத்தியுள்ளனர்.
இதேவேளை அண்மையில் கடலில் நீர் வீதிக்கு வருவதாக கூறி முல்லைத்தீவு பிரதேச மக்கள் நகரத்தின் கடைகளை மூடிவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்ற சம்பவமும் நடைபெற்றது.
இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அதிகாரி காமினி பிரியந்த கடல் நிலைமை தொடர்பில் அனைவருக்கும் அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் பிரிவு பிரிவு குழுவினர், கொழும்பில் உள்ள சில குழுக்கள் இது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். எனினும் அவர்களால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் அமெரிக்காவின் சுற்றுலா சூழல் மற்றும் புவியியல் மாற்றம் தொடர்பான ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் சிலர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் அழைப்பிற்கமைய முல்லைத்தீவிற்கு வருகைத்தந்துள்ளனர்.
அமெரிக்க ஆய்வு குழுவினர், மாவட்டத்தின் மேலதிக செயலாளர், அனர்த்த முகாமைத்துவ அதிகாரி காமினி பிரியந்த ஆகியோருடன் முல்லைத்தீவு கடல் எல்லைக்கு சென்று ஆரம்ப ஆய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Print Friendly, PDF & Email