SHARE

– கட்சியின் தலைவர் 4 ஆம் மாடிக்கு அழைப்பு

ஜனநாயக போராளிகள் கட்சியையும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கலான உறுப்பினர்களையும் இலக்கு வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளார்கள் என்று யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இக்கட்சியின் செயலாளர் நாயகம் கதிர் கடந்த 14 ஆம் திகதி 04 ஆம் மாடிக்கு அழைக்கப்பட்டு காலை முதல் மாலை வரை முழுநேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் மீண்டும் விசாரணைக்கு எப்போது அழைக்கின்றபோதிலும் தவறாமல் பிரசன்னமாக வேண்டும் என்கிற கட்டாய நிபந்தனையின் அடிப்படையில் விடுவித்து அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் இக்கட்சியின் தலைவர் வேந்தன் எதிர்வரும் 28 ஆம் திகதி காலை 4 ஆம் மாடிக்கு விசாரணைக்கு வர வேண்டும் என்று பயங்கரவாத புலனாய்வு பிரிவு எழுத்துமூல அழைப்பாணை பிறப்பித்து உள்ளதுடன் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் யாழ்ப்பாண அலுவலகத்தை சேர்ந்த  உத்தியோகத்தர்கள் கடந்த வியாழக்கிழமை பருத்தித்துறையில் உள்ள இவரின் இல்லத்துக்கு நேரில் சென்று அழைப்பாணை உத்தரவை கையளித்தனர்.
பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் ஜனநாயக போராளிகள் கட்சியும், அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் அடங்கலான உறுப்பினர்களும் அண்மைய காலங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது குறித்து தலைவர் வேந்தன் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில்  ஊடகங்களுக்கு தெரிவித்தவை வருமாறு:-
ஜனநாயக போராளிகள் கட்சி இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி ஆகும். இக்கட்சியின் செயற்பாட்டாளர்கள் அரசாங்கத்தால் புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் ஆவர். புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமுதாயத்தோடு இரண்டற கலந்து வாழ அனுமதிக்கப்பட்ட இவர்கள் அமைதியான, வன்முறை அற்ற வாழ்க்கையையே மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் எந்தவொரு வன்செயலிலும் ஈடுபட்டதாகவோ, சட்டத்துக்கும், சமூகத்துக்கும் விரோதமான நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவோ நாட்டில் உள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு எதுவும் கிடையாது.
இந்நிலையில் ஜனநாயக போராளிகள் கட்சி செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொலிஸாரால் புலனாய்வு விசாரணைகள் முடுக்கி விடப்பட்டு இருப்பது பேரதிர்ச்சி தருகின்றது. போருக்கு பிந்திய இன்றைய அமைதி சூழலில் இயல்பு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் பயங்கரவாத முத்திரை குத்துகின்ற முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுவதாகவே நாம் இதை ஐயுறவு கொள்ள வேண்டி உள்ளது. தென்னிலங்கையை சேர்ந்த ஜே. வி. பியினர் ஒரு காலத்தில் புரட்சியில் ஈடுபட்டு இருந்தனர் என்பதும் ஆயினும் அவர்கள் முழுமையான அளவில் இயல்பான, அமைதியான வாழ்க்கை வாழ அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2015 ஆம் ஆண்டு தோற்றம் பெற்ற ஜனநாயக போராளிகள் கட்சி அது ஆரம்பிக்கப்பட்டு குறுகிய கால பகுதிக்குள் பிரமாண்ட வளர்ச்சி கண்டு மக்கள்மயப்பட்ட அரசியல் அமைப்பாக பரிணமித்து வருகின்ற நிலையில் எமது கட்சியை முடக்கின்ற சதி திட்டத்தின் ஒரு அம்சமாகவே இதை எமது ஆதரவாளர்கள் பார்க்கின்றார்கள்.மேலும் இது புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இரும்பு கரம் கொண்டு அடக்குகின்ற செயற்பாடாகவே எம்மால் மாத்திரம் அன்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும் பார்க்கப்படுகின்றது.
Print Friendly, PDF & Email