SHARE

தமிழ் மக்களின் உணர்வுகளை விளங்கிக்கொள்ளாது சிங்கள, பௌத்த மேலாதிக்கத்துடன் செயற்படும் தனியார் வங்கியை வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தடைசெய்ய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதி அமைச்சு மீதான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பில் இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூர்ந்து வங்கியில் நினைவுச்சுடர் ஏற்றியமைக்காக பிரபல தனியார் வங்கியின் ஊழியர்கள் இருவர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.

குறித்த, வங்கியின் கிளிநொச்சி கிளையில் பணி புரிந்த இருவரே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தத்தின் காரணமாக உயிரிழந்த தமது தமிழ் உறவுகளுக்காக கடந்த 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் வடக்கு முதல்வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து தீப்பந்தங்களை ஏற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்நிலையில், உயிரிழந்த தமது உறவினர்களுக்காகவும், பொதுமக்களுக்காகவும் குறித்த ஊழியர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இந்த காரணத்தினாலேயே இவர்கள் இருவரும் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர், மேற்படி தனியார் வங்கி சிங்கள வங்கியா? தமிழர்களை ஏற்க மறுத்தால் வடக்கில் அப்படியொரு வங்கியே தேவையில்லை.

உயிரிழந்த உறவினர்களுக்கு கண்ணீர் விடுகின்ற உரிமை இல்லையெனில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர் மனோ கணேசன் வசமிருக்கும் நல்லிணக்க அமைச்சுக்களை மூடிவிடுங்கள் என எச்சரித்துள்ளார்.

Print Friendly, PDF & Email