SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் பெருமளவு கனிய மணலை அகழ்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் நிலையில், அதனை தடுத்து நிறுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படும் என அவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் 124ஆவது அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போதே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணையை சபைக்கு முன்வைத்து உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,

“முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய எல்லை கிராமங்களிலிருந்து 1984ஆம் ஆண்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் மக்கள் மீள்குடியமரும் போது அவர்களுடைய காணிகள் பறிபோ யிருந்தன.

கொக்கிளாய் கிராமத்தில் சுமார் 44 ஏக்கர் நிலத்தை அபகரித்து இல்மனைட் மணல் அகழ்வுக்கான பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து கிராம மக்கள் இராணுவ அழுத்தங்களுக்கும் மத்தியில் போராட்டங்களை நடாத்தியிருந்தார்கள்.

அப்போது நிறுத்தப்பட்ட கனியமணல் அகழ்வு நடவடிக்கைகள் 9 வருடங்கள் கழித்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்காக கடந்த முதலாம் திகதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் இலங்கை கனிய மணல் கூட்டுத்தாபன அதிகாரிகள் கூட்டம் ஒன்றை நடாத்தியிருக்கின்றார்கள்.

இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகள் எவரும் அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, “அந்த கூட்டத்தை தாம் ஒழுங்கமைக் கவில்லை. இடத்தை மட்டுமே கொடுத்தேன்” என்று கூறினார்.

மக்கள் பிரதிநிதிகள் அழைக்கப்படாமை குறித்து தான் கூட்டத்தில் கேட்டதாகவும் அவர்களுக்கு பின்னர் கூட்டம் ஒன்று நடாத்தப்படும் என கூறப்பட்டதாகவும் மாவட்ட செயலர் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கொக்கிளாய் தொடக்கம் நாயாறு வரையான மிக நீண்ட பகுதியில் சுமார் 1 மீற்றர் ஆழத்திற்கு கனிய மணல் அகழப்படவுள்ளதாக அறியக்கிடைக் கிறது.

இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் இலகுவாக கடல்நீரானது உள்புகும் ஆபத்து உள்ளது. சாதாரணமாகவே கடல் பெருக்கெடுக்கும் காலங்களில் மேற்படி எல்லை கிராமங்களில் கடல் நீர் உள்புகுவது வழமை.

இவ்வாறான நிலையில் கரையோரங்களில் மணலும் அகழப்பட்டால் பாதிப்பு மேலும் அதிகமாகும் வாய்ப்புக்கள் உள்ளன.

எனவே இந்த கனிய வள கொள்ளை தொடர்பாக வடமாகாணசபை உரிய நடவடிக்கை எடுத்தாகவேண்டும் – என்றார்.

கனிய மணல் அகழ்வு உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Print Friendly, PDF & Email