SHARE

இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களிற்கு பொறுப்புக்கூற வேண்டியவராக அடையாளப்படுத்தப்பட்டிருந்த முக்கிய இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே, இராணுவத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

அண்மைக்காலமாக சர்ச்சைகளில் சிக்கியிருந்தவர் மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே. இறுதிப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்களிற்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளில் ஒருவரான இவருக்கு எதிராக, பிரித்தானியாவில் சட்ட நடவடிக்கைகளை எடுக்க முயற்சிக்கப்பட்ட போது, அங்கிருந்து தப்பி வந்தார்.

அண்மையில் அவுஸ்ரேலியாவுக்கு செல்வதற்கு முற்பட்ட போது, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளினால் இவருக்கு விசா மறுக்கப்பட்டிருந்தது.

இறுதிப்போரில், 58ஆவது டிவிசனின் கொமாண்டோ படைப்பிரிவை வழி நடத்தியவர் பிரிகேடியர் சாஜி கல்லகே. முல்லைத்தீவு நகரத்தை இராணுவம் கைப்பற்றிய பின்னர், 59ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாகவும் அவர் பணியாற்றினார். இந்த சமயத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களில் அவரது பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

போரின் பின்னர் மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் 51ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பதவி வகித்த சமயத்தில், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நல்லிணக்கப் பொறிமுறைக்கான செயலணி தொடர்பாக விளக்கமளித்தபோது, அவருடன் சாஜி கல்லகே முரண்பட்டு சர்ச்சைக்குள்ளாகியிருந்தார்.
இதையடுத்து மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே உடனடியாகவே, இராணுவத் தலைமையகத்தில் காலாட்படைகளின் தளபதியாக மாற்றப்பட்டிருந்தார். வேறு உயர் பதவிகள் அளிக்கப்படாமல் வைக்கப்பட்டிருந்த இவர் விரைவில் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.

இராணுவ புலனாய்வுத்துறையிலும் இவர் பணியாற்றியிருந்தார்.

இதனால், காலாட்படைகளின் தளபதி பதவியில் இருந்து மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே விடுவிக்கப்பட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email