மானிப்பாய் அந்தோனியார் தேவாலய தேர் பவனியின் போது கையில் குழந்தை இயேசுவை ஏந்திய தூய அந்தோனியாரின் திருச்சொருபம் வீழ்ந்து உடைந்த மனக்கிலேசமூட்டும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆலயத்தின் திருவிழா நாளான நேற்று (17) நடைபெற்ற குறித்த சம்பவத்தால் தேவாலயத்தில் கூடி இருத்த மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததுடன் பெரும் சோகமாக காணப்பட்டனர்.
அந்தோனியார் தேவாலய தேர் பவனி நேற்றைய தினம் மாலை இடம்பெற்றது. அதன் போது தேரில் கையில் குழந்தை இயேசுவை ஏந்திய அந்தோனியாரின் திருசொருபம் பவணியாக எடுத்து வரப்பட்டது.
இந்நிலையில் தேர் தேவாலயத்தினை சுற்றி மீண்டும் தேவாலய முன் பகுதிக்கு வந்த வேளை அப்பகுதியில் இருந்த தாழ்வான பகுதிக்குள் தேரின் சில்லு இறங்கியமையால் தேர் சரிந்தது. அதன் போது தேரில் எடுத்து வரப்பட்ட தூய அந்தோனியாரின் திருச்சொருபம் கீழே விழுந்து தலை பகுதியில் சேதமடைந்தது.
அதன் பின்னர் உடனடியாக திருசொரூபம் தேவாலயத்தினுள் எடுத்து செல்லப்பட்டு , மற்றுமொரு திருசொரூபம் எடுத்து வரப்பட்டு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.
தேவாலய பெருநாளின் போது திருசொரூபம் விழுந்து சேதமடைந்தமை பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி இருந்தது.