SHARE

யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோர் தங்கியுள்ள போது யாழ்.கொடிகாமம் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் றஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் நேற்று சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்ந்தனர்.

அவர்கள் இன்றும் யாழ்.மாவட்டத்திலேயே தங்கியிருக்கும் நிலையில் யாழ்.கொடிகாமம் பகுதியில் இன்று அதிகாலை 1 மணியளவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கொடிகாமம்- கச்சாய் வீதியில் வீ.சி. ஒழுங்கையில் உள்ள வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்த குழு ஒன்று வீட்டை அடித்து சேதப்படுத்தியதுடன் வீட்டுக்குள் புகுந்து 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசா சசிக்குமார் (வயது 44) என்பவர் மீது சரமாரியாக வாளால் வெட்டிவிட்டுத் தப்பி சென்றுள்ளனர். சம்பவத்தில் படுகாயமடைந்த சசிக்குமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு உடனடியாகவே முறைப்பாடு கொடுக்கப்பட்டபோதும் இன்று காலை 9 மணிவரை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கூறி 24மணி நேரத் திற்குள் வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Print Friendly, PDF & Email