SHARE

வலி கிழக்கில் போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை பிரதேச சபை ஆரம்பித்தது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிடங்கள்; பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கடந்த பிரதேச சபைக் கூட்டத்தில் எமது மண்ணில் இருந்து போதையை ஒழிப்பதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றி பிரஸ்தபிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், முதலில் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களுள் ஒன்றான அச்சுவேலியை மையப்படுத்தியும் அதனைத் தொடர்ந்து காலப்போக்கில் ஏனைய கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டது.

இதனடிப்படையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை காலை அச்சுவேலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் ஆரம்பமாகின.

அச்சுவேலி நகரில் சில மணி நேரங்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் கூடிய பிரதேச சபையின் ஊர்திகள் போதைக்கெதிரான விழிப்புணர்வு வாசங்களை ஒலிபெருக்கி ஊடாக அறிவிப்புச் செய்தவாறு நகர் வலம் வந்தன. இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டவர்களும் போதைக்கு எதிரான சுலோகங்களுடன் நின்று போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்புச் செய்தனர்.

பின்னர் அச்சுவேலி நகரின் வீதிகள் வழியாக பேரணியாகச் சென்ற விழ்ப்புணர்வாளர்கள் பொது இடங்கள், தனியார்கல்வி நிலையங்கள், சந்தை என மக்கள் கூடும் இடங்கள் தோறும் சிறு சிறு பிரசாரக் கூட்டங்களை நடத்தியதுடன் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகித்தனர்.

இந் நிகழ்வுகளில் அச்சுவேலி பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்ததுடன்  குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email