SHARE

வவுனியா வடக்கு நெடுங்கேணியில் உள்ள வெடுக்குநாறி ஐயனார் ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்ள தடையில்லை என நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலை மீது ஆதி ஐயனார் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்திற்கு அப்பகுதி மக்கள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு வந்தனர்.

அந்நிலையில் கடந்த 10ஆம் திகதி குறித்த ஆலயத்தை சேர்ந்தவர்களை நெடுங்கேணி பொலிசார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து இருந்தனர்.

அதன் பிரகாரம் பொலிஸ் நிலையம் சென்ற ஆலய நிர்வாகத்தினரிடம் , அங்கு நின்ற தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் , குறித்த வெடுக்குநாறி மலை எமது தொல்லியல் திணைக்களத்தின் ஆளுகைக்கு உட்பட்டது எனவும் , அதனை சூழவுள்ள காட்டு பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் எனவும் ஆலய நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளனர். மீறி சென்றால் சட்ட நடவடிக்கை எடுப்போம் எனவும் கூறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிசார் , அவ்விடங்களுக்கு செல்ல வேண்டாம் என ஆலய நிர்வாகத்தினருக்கு அறிவுறுத்தினார்கள். அதன் போது ஆலய நிர்வாகத்தினர் மறுநாள் (11ஆம் திகதி ) ஆடி அமாவசை திதி ஆலயத்தில் விசேட பூஜை ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. எனவே அன்று ஆலயத்திற்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரி இருந்தனர். அதற்கு தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிசார் சம்மதித்தனர்.

அதன் பிரகாரம் ஆலயத்திற்கு சென்று அன்றைய தினம் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

அந்நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த ஆலயத்தின் நிர்வாகத்தினரை மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு நெடுங்கேணி பொலிசார் ஆலயத்தில் வழிபாடுகள் மேற்கொள்ள தடையில்லை எனவும் , ஆலயம் மற்றும் அது அமைந்துள்ள மலை மற்றும் அதனை சூழவுள்ள காட்டு பகுதிகள் என்பன தொல்லியல் திணைக்களத்தின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளன.

எனவே ஆலயத்தில் ஏதேனும் மாற்றங்கள் , கட்டடங்கள் அமைத்தல் போன்ற ஏதேனும் செயற்பாடுகளை செய்வதாயின் அதற்கு தொல்லியல் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். ஆலயத்திற்கு சென்று வருவதற்கோ , பூஜை வழிபாடுகளை மேற்கொள்ளவோ எந்த தடையும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email