SHARE

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் தாயும் நான்கே வயதான மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (15) காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தாய் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டின் முன்னால் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து முன் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில், எமது வீட்டிற்கு குறித்த நான்கு வயது சிறுவன் வந்திருந்தான். அதன் பின் குறித்த தாயும் வந்திருந்தார். இருவரும் நன்றாக வழமை போல் என்னுடன் கதைத்தனர்.  இதன்போது வீட்டில் இருந்த றொட்டியை சாப்பிடக் கொடுத்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள். அவர்கள் வீட்டில் நிற்கும் போது நான் அயலில் இருந்த கடைக்கு சென்று விட்டேன். 10 நிமிடத்தில் திரும்பி வந்து விட்டேன். அப்போது அவர்களை காணவில்லை.

சிறிது நேரத்தில் அவர்களது மற்றைய பிள்ளையான 9 வயது சிறுவன் தாயாரை தேடி வந்தான். இதன்போது அவனுடன் இணைந்து தேடிய போதே குறித்த தாயும் மகனும் கிணற்றில் சடலமாக இருந்ததை கண்டோம் எனத்தெரிவித்தார்.

மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளை இலங்கை காவல்துறை முன்னெடுத்து வருகின்றது.

Print Friendly, PDF & Email