SHARE
– யோகேஸ்வரன்

அற்ப சலுகைகளைப் பெறுவதற்காக விலைபோன வியாழேந்திரன் எம்.பி.யை கட்சியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

அற்ப சலுகைகளைப் பெறுவதற்காகவே, வியாழேந்திரன் எம்.பி, புதிய அரசாங்கத்தில் இணைந்துகொண்டுள்ளார் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கொண்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து, பிரதியமைச்சர் பதவியை ஏற்றுள்ள வியாழேந்திரனின் முடிவு தொடர்பில்  கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கூட்டமைப்பிலிருந்து நீண்டகாலமாக மாறக்கூடிய சூழலில் இருந்து வந்த நிலையிலேயே, அவர் தற்போது மாறியிருக்கின்றார்.

வியாழேந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பில், தமது கட்சியின் தலைமைப் பீடத்துக்கு அறிவித்திருந்ததாகவும் அதில் தாம் எச்சரிக்கையாக இருந்தாகவும் தெரிவித்த யோகேஸ்வரன் எம்.பி, ஆனால், வியாழேந்திரன் திடீரென கனடாவுக்குச் சென்றிருந்த நிலையில், மீண்டும் இலங்கை வந்ததும் விமான நிலையத்திலிருந்தே நேரடியாக புதிய அரசாங்கத்திடம் சென்றுவிட்டார் என்றும்தெரிவித்தார்.

மேலும், வியாழேந்திரன், புளட் கட்சி சார்ந்தவராக இருந்தலும், தங்களது தமிழரசுக் கட்சியில்தான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தர் எனச் சுட்டிக்காட்டிய அவர், அதற்கிணங்க, தமது கட்சியிலிருந்து அவரை நீக்குவதாக, தமிழரசுக் கட்சியின் செயலாளர் நாயகம், தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம் அனுப்பி வைப்பார் என்றும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email