SHARE

யாழ். கோப்பாயில் 51ஆவது படைத் தலைமையகம் உள்ள காணிக்கு (கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம்) எதிரே உள்ள வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில்  தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி மாவீரர் நாள் நிகழ்வை நடத்த யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தடை விதித்ததுள்ளது.

வீரசிங்கம் சிறிதரன் என்பவருடைய காணியில் தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் சின்னங்கள், கொடிகள் மற்றும் வரைபடங்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக பொலிஸாரின் புலன் விசாரணையின் அடிப்படையில் அறியப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் குற்றம் இடம்பெற்றதாக பொலிஸாரால் குறிப்பிடப்படவில்லை.

எனவே வீரசிங்கம் சிறிதரன் மற்றும் அவர் சார்ந்தவர்கள் அந்தக் காணியில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடிகள், சின்னங்கள் மற்றும் வரைபடங்களைப் பயன்படுத்தி நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்படுகிறது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கட்டளையை வழங்கினார்.

கோப்பாய் பொலிஸார் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கடந்த புதன் கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அதன் மீதான கட்டளையை இன்று மாலை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் வழங்கினார்.

Print Friendly, PDF & Email