SHARE

நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை தவிர்க்க கோரியும் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப்  போராட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் கனகபுரம் விளையாட்டு மைதானத்திலிருந்து ஆரம்பித்து பொதுச் சந்தை வரை இடம்பெற்றது.

இந்த போராட்டத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துக்கொண்டனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போராட்டக்காரர்கள்,

நாட்டில் இனி ஒரு யுத்தம் எமக்கு வேண்டாம். இதற்கு முன்னர் நடைபெற்ற யுத்தத்தில் பல உயிர்களையும் சொத்துக்களையும் இழந்துள்ளோம். அவ்வாறு இடம்பெற்ற யுத்தத்தில் நாம் எதையும் சாதிக்கவில்லை. இந்த நிலையில் தற்போது நாட்டில் உள்ள சமாதானமான சூழலை குழப்புவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர் தமது சுய அரசியல் இலாபத்திற்காக இவ்வாறு சிலரால் திட்டமிட்டு நாட்டில் சமாதானமற்ற சூழலை உருவாக்கும் முயற்சிகள் இடம்பெறுகின்றன.

அந்தவகையில்தான் மட்டக்களப்பில் பொலிஸார் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் பின்புலத்தில் முன்னாள் போராளிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உண்மையில் நாமும் முன்னாள் போராளிகள்தான். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டில் சமாதானமற்ற சூழலை ஏற்படுத்த முயற்சிக்க மாட்டோம்.

புனர்வாழ்வு பெற்று வந்த எம்மில் பலருக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏனைய முன்னாள் பொராளிகளிற்கும் இவ்வாறு வேலை வாய்ப்புக்களை வழங்கும் பட்சத்தில் அவர்களும் தம்கான வாழ்வாதாரத்தினை முன்னெடுப்பார்கள்.

குறித்த சூழ்நிலையை பயன்படுத்தி சில அரசியல் கட்சிகள் முன்னாள் போராளிகள் ஒரு சிலரிற்கு பணம் கொடுத்து இவ்வாறு குழப்பத்தை ஏற்படுத்த முயல்கின்றது எனவும்  தெரிவித்தனர்.

Print Friendly, PDF & Email