இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து 12 வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.
இந்தநிலையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து 12 வெளிநாட்டவர்கள் காணாமல் போயுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாறு காணாமல் போயுள்ளவர்கள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அடையாளம் காணப்படாத சடலங்களிடையே சடலமாக காணப்படலாம் என சந்தேகிப்பதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, குண்டுவெடிப்பில் உயிரிழந்த 42 வெளிநாட்டவர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.